வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு பகுதியில் நேற்று இரவு (டிச. 18) சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் ஒருவர் நீண்ட நேரமாகச் சுற்றிவந்துள்ளார். இதைக் கண்ட நோயாளிகளுடன் வந்த பெண்கள், அவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஆண் குரலில் பேசியுள்ளார்.
பெண்கள் அலறல்
இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் பெண் வேடமிட்டு குழந்தை கடத்த வந்ததாகக் கூறி சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அந்த நபரின் ஆடைகளைக் கிழித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
விசாரணை
இதையடுத்து, காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண் வேடமிட்டிருந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த கரிகாலன் என்பதும், தற்பொழுது திருநங்கையாக மாறிவருவதும், தனது உறவினரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரின் உறவினர்களை காவல் துறையினர் வரவழைத்து விசாரித்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: எனது அடையாளம் நளினமான ஆடையில் இல்லை - திருநங்கை முத்துமீனாட்சி