வேலூர்: ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள மிகப் பழமையான வசிஸ்டேஷ்வரர் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அதே பகுதியில் இருந்த 52 ஏக்கர் விவசாய நிலத்தை வக்புக்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் ஆணை வழங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது, 'தமிழ்நாட்டில் நடைபெறுவது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல, மாலிக் கபூர் அரசாங்கம். நாடு முழுவதும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை போல 7 மடங்கு கொண்ட சுமார் ரூ.12.5 லட்சம் கோடி மதிப்பிலான நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என அபகரிக்கப்பட்டுள்ளன.
வேப்பூர் கிராமத்தில் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற்று, விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 52 ஏக்கர் விளைநிலத்தை, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என வழங்கி மாவட்ட நிர்வாகம் தவறு செய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் வழங்கவில்லை என்றால், பாஜக சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்’ என எச்சரித்தார்.
’ஸ்டாலின் அரசாங்கம் இந்து மக்களுக்கு விரோதியாக செயல்படுகிறது. ஓட்டு அரசியலுக்காக நாங்கள் பார்ப்பானுக்கு தான் விரோதி என நடிக்கின்றனர். இந்துக்களின் ஓட்டு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலையை இந்து இயக்கங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளது. இதனைக் கண்டு திமுக மற்றும் கருப்பு சட்டை அணிந்த 43 பேர் அஞ்சுகின்றனர். இந்து மக்களுக்கு எதிராக பேசுவதற்கு அச்சப்படுகின்றனர்’ என விமர்சனம் செய்தார்.
சமீபகாலமாக இந்து சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக சுமார் ஒரு லட்சம் புகார்கள் தனது ட்விட்டர் கணக்கிற்கு வந்துள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து புகார்களையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்து சொத்துகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார், எச்.ராஜா.
இதையும் படிங்க:"கதவையும் திறக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை" - அண்ணாமலை விளக்கம்