வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யாததால், தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வனப்பகுதியில் வனவிலங்குகளும் குடிக்க நீருன்றி தவித்து வருகின்றன.
இந்நிலையில் குடியாத்தம் அடுத்த முதலியார் ஏரி காப்புக்காட்டில், இரண்டரை வயது ஆண் புள்ளிமான் ஒன்று, தண்ணீரை தேடி இன்று ஊருக்குள் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் புள்ளிமானை துரத்த ஆரம்பித்தனர். மக்களை கண்ட அச்சத்தில், அங்கிருந்த காளியம்மன் கோயிலுக்குள் புள்ளி மான் புகுந்துவிட்டது.
இதையடுத்து பொதுமக்கள் கோயிலின் கதவை இழுத்து மூடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், மானைப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறை அலுவலர்களுக்கு போக்குகாட்டி, கோயில் முழுவதும் மான் சுற்றி வந்தது. ஒருக்கட்டத்தில் புள்ளிமானை அலுவலர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி காப்புக் காட்டில் புள்ளிமானை விட்டனர்.