வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் குறித்து கண்காணிக்க மாநகர் பகுதிகளில் உள்ள நான்கு மண்டலங்களுக்கு என தனித்தனியாக கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல். 28) ஒரே நாளில் 497 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்கு உட்படட பழைய பேருந்து நிலையத்தில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், நடத்துனர்களிடம் முகக்கவசம் அணியாமல் வந்தால் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.