சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை செவிலி இந்திரா மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலி பிரேமா ஆகிய இருவரும் கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் கடந்த ஆண்டு முதல் ஈடுப்பட்டுவந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கலில், “செவிலியர்கள் இந்திரா, பிரேமா ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இந்த உயிரிழப்பு செய்தியை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் சுகாதார துறை செயலரிடம் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அனைவருக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார துறை செயலர் கூறுகையில், “மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து செவிலியர்களுக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கபடும். செவிலியர்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் கவனமாக பணி செய்திட வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: சமூக நீதியை காக்க சட்டத் திருத்தம் அவசியம் - மருத்துவர் ராமதாஸ்