திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் வெகுவாக பாதித்துள்ளது. இதற்காக மத்திய அரசு இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்க முன் வரவில்லை என்றும் காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா ஆகியோரின் நடவடிக்கை குறித்து ரஜினிகாந்த் கூறியதற்கு பதில் கூற விரும்பவில்லை. ஆனால் ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் தான். அதனால் இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு குரல் தெரிவித்துவிட்டு, தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் தெரிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் என திருமாவளவன் கூறினார்.