திருச்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் 4 வது மாநில மாநாடு திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு கருத்தரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு (Road Inspectors), இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer) என பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்களை, நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். 2022- 2023 ஆம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வு வழங்கி உடனடியாக நிரப்ப வேண்டும்.
சாலைகளின் நீளத்தின் தன்மைக்கு ஏற்ப சாலை பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை 2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், “திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. நியாயமான கோரிக்கைகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டில் மதவாதமும், மனுநீதியும் காலூன்ற முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் சமூக நீதி இருக்கும் வரையில் மனுநீதி உள்ளே வர முடியாது.
அண்ணாமலை நடைபயணத்தை ஏற்கனவே ரத்து செய்து விட்டு பெரும்பாலும் வேனில் தான் பயணிக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக கூறுகிறார்கள். அவர் அங்கு போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். வேறு எந்த இடத்தையும் விட தமிழ்நாடு தான் சரியான தீர்ப்பளிக்கும். யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் மக்கள் சரியாக தான் வாக்களிப்பார்கள்.
வட நாட்டிலேயே மோடியால் வெற்றி பெற முடியுமா? என தெரியவில்லை தமிழ்நாட்டில் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வாரணாசியில் போட்டியிட்ட அவர் அடுத்து ராமேஸ்வரம் வருவதாக கூறுகிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மீண்டும் குஜராத்துக்கு தான் செல்வார். நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடும் முடிவு செய்யும்” என்றார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலை. துணைவேந்தர் மீது முறைகேடு புகார்.. விசாரணைக்கு அனுமதி கேட்டு ஆளுநருக்கு கடிதம்!