தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மாவட்ட வாரியாக கரோனா ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் நேற்று (மே20) சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கார் மூலம் மதுரையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு திருச்சி வந்தார். முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், அலுவலர்களுடன் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
ராஜிவ் காந்தி சிலைக்கு மரியாதை
மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் ராஜிவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கும், அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த திருவுருவப் படத்திற்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல்துறை ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
என்.ஐ.டி.யில் கரோனா சிகிச்சை மையம்
இதைத்தொடர்ந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஸ்டாலின் ஓய்வெடுத்தார். இன்று மாலை திருச்சி கி.ஆ.பெ அரசு விசுவநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி.யில் கரோனா மையத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதன் பின்னர் இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
இதையும் படிங்க: ஆர்டிபிசிஆர்: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!