திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 மதிப்புள்ள 176 கிராம் தங்கத்தை பவுடர் வடிவில் கடத்தி வரப்பட்டதை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம், கரன்சி நோட்டுகள் மற்றும் உயிரினங்களான பறவைகள் மற்றும் பாம்புகள் போன்றவைகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்11) துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் பயணிகளை சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: சிலப்பதிகாரம் பற்றி பெரியார் என்ன கூறினார் என கனிமொழி எம்பி படிக்க வேண்டும் - அண்ணாமலை காட்டம்!
இச்சோதனையில் பயணி ஒருவர் ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 மதிப்புள்ள தங்கத்தை பவுடர் வடிவில் அட்டை பெட்டியில் தூவி மறைத்து கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை பவுடர் வடிவில் சட்ட விரோதமாக கடத்தி வந்தார்? அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார்? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வந்தாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீது விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி