திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி. இவரது இளைய மகன் சிவனேசன். இவர் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்துவந்தார்.
இந்நிலையில், சிவனேசன் தனது நண்பர்களுடன் தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவனேசன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிவனேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.