திருச்சி புத்தூரில் பல வருடங்களாக மீன் மார்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட்டை சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பல புகார்கள் வந்ததால், இதைனை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையடுத்து திருச்சி உறையூர்- குழுமணி சாலையில் லிங்க நகர் காசி விளங்கி பகுதியில் ரூ. 3.32 கோடியில் புதிய மீன் மார்கெட் வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்த 8 விற்பனை கடைகளும், சில்லறை விற்பனைக்கு
25 கடைகள் என மொத்தம் 33 கடைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், மீன் வெட்டி தருவதற்கு நவீன முறையில் தனி மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்கெட் புத்தூரிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு நேற்று (அக்.10) முதல் செயல்பட தொடங்கியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புத்தூரில் இருந்த பழைய மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு ரூ. 20.20 கோடி செலவில் நவீன வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவத்துள்ளது.
எனினும் புத்தூர் மீன் மார்க்கெட்டில் இருந்த ஒருசில வியாபாரிகளுக்கு புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடை ஒதுக்கீடு செய்யவில்லை என்று நேற்று காலை சர்ச்சை எழுந்தது. எனவே, இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வாலாந்தரவை தோட்டக்கலை பண்ணையை ஆய்வுசெய்த உயர் அலுவலர்