திருச்சியில் வெற்றி பெற்ற கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் நாளை (மே.7) காலை பதவியேற்கிறார்.
இந்நிலையில் அவருடன் பதவி ஏற்கும் 33 அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை (உள்ளாட்சித் துறை) அமைச்சராக பதவியேற்கிறார்.
இவரைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற இனிகோ இருதயராஜ் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!