கரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல், மே,ஜூன் ஆகிய மாதங்களில் மின்சார கணக்கீடு என்பது நடைபெறவில்லை. பிப்ரவரி மாதம் என்ன மின் கட்டணம் செலுத்தப்பட்டதோ? அதே மின் கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு செலுத்தலாம் என்றும், பின்னர் மின் கணக்கீடு எடுக்கப்பட்டு தொகை சரிசெய்யப்படும் என்றும் மின்சார வாரியம் அறிவித்தது.
மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த மின் கணக்கீடு செய்யும் உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மின்சார வாரியத்தின் மின் கணக்கிடும் முறையில் எந்த விதி மீறலும் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
இந்நிலையில், அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டணம் என்பது பலமடங்காக தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுதாரர் எம்.எல். ரவி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், மின்சார கட்டணத்தை அனைத்தை தரப்பினரும் செலுத்திவிட்ட நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என உத்தரவிட்டு மறுஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.