நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா பயிர்களை காக்க அரசு இறவை பாசன திட்டத்தில் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அக்.,6) விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாசனத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால், தற்போது நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது.
இறவை பாசனத் திட்டத்தில் 20 மணி நேரத்தில் இருந்து ஆறு மணி நேரமாக குறைத்து மின்சாரம் வழங்குவதைக் கண்டித்தும், கருகும் பயிர்களைக் காப்பாற்ற வழக்கம்போல 20 மணி நேரம் மின்சாரத்தை வழங்கக் கோரியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.