திருப்பூர் மாவட்டம், அருள்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், காரணம்பேட்டையில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்பவர், தான் ஒரு வங்கி அலுவலர் எனக் கூறி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள வங்கி ஒன்றில் பணிபுரிவதாவும், தனது வங்கியில் பழைய நகைகள் குறைந்த விலைக்கு ஏலத்திற்கு வருவதாகவும் கூறி, கடந்த மார்ச் 23ஆம் தேதி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அவரிடமிருந்து பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆறு பவுன் தங்க நகைகளையும் அவரை ஏமாற்றிப் பெற்றுள்ளார். அவற்றை வாங்கியதைத் தொடர்ந்து, சோனியா தலைமறைவாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இது தொடர்பாக கார்த்திக் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில், சோனியாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பணம் மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது!