பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான அனைத்து அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக இந்தியா முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பல்வேறு கட்ட தேர்வுகளில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 2019 பிப்ரவரி 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டப்பணிகள், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை, தினசரி மற்றும் வார சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போதுவரை 125 பணிகள் நிறைவடைந்துள்ளன. 83 திட்டங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன. 21 திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் ஒரு பணிகூட திருப்பூரில் முடிக்கவில்லை. மதுரையை பொறுத்தவரை ஒரு பணி மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. இதில் அதிகபட்சமாக கோவையில் 42 பணிகள் முடிந்துள்ளன. அடுத்தபடியாக சென்னையில் 21 பணிகள், சேலத்தில் 18 பணிகள், தூத்துக்குடியில் மூன்று பணிகள், நெல்லையில் ஆறு பணிகள், திருச்சியில் மூன்று பணிகள் முடிந்துள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 343 கோடியில் ரூ. 287 கோடிக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பணியாக செய்து முடித்து இருந்தால் சுலபமாக முடித்திருக்கும். ஆனால் அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சி செய்து வருவதால் எந்த பணிகளும் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பணிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் நீடிக்கும் என்பதுகூட அலுவலர்களுக்கு தெரியவில்லை" என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "கரோனா காலம் என்பதால் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன. கூடிய விரைவில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திருப்பூர் மாநகரம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத கோயில் மற்றும் சுற்றுலா நகரங்கள்!