சென்னையில் ஆட்டோ ஓட்டி வரும் தமிழ்ச்செல்வன் (39) தனது மனைவி கஸ்தூரி (32) மூத்த மகன் அயனேஸ்வரன் (10) மற்றும் இளைய மகன் பாலன் (9) ஆகியோருடன் வசித்து வந்தார். இவருக்கு போதிய வருமானம் இல்லாததினால், இவரது மனைவி கஸ்தூரியை கடந்த பத்து மாதங்கள் முன்பு திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் டெய்லராகவும், பின்னர் பெரியாயிபாளையம் அரசு பள்ளியில் அவரது மகன்களான அயனேஸ்வரனை 5ம் வகுப்பிலும், பாலனை 3-ம் வகுப்பிலும் சேர்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்நிலையில், அக்.22ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற கஸ்தூரி இரவு வீடு திரும்பியதும் வீட்டில் மகன்கள் இல்லாததால் அக்கம்பக்கம் தேடி விசாரித்துள்ளார். அப்போது, அருகில் உள்ள பாறைக்குழி பகுதியில் விளையாடச் சென்றதாக, தனது மகன்களின் நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று கஸ்தூரி பார்த்த போது தனது மகன்களின் ஆடைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பதறிய கஸ்தூரி, அவிநாசி காவல் துறைக்கும், தீயணைப்புக் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அயனேஸ்வரன் உடலை மீட்டனர். இரவு நேரம் வெளிச்சம் இல்லாததால் தொடர்ந்து தேடுதல் பணி மேற்கொள்ள முடியாமல் நேற்று (அக்.22) காலை வரை பாலன் உடலை தேடும் பணியை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து நேற்று காலை பாலன் உடல் தண்ணீரின் மேலே வந்தது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அண்ணன் தம்பி என இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேம்பால தடுப்புச் சுவரின் மீது இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!