திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியில் கடந்த 24ம் தேதி சோளக்காட்டில் வேலை செய்து வந்த வரதராஜன் மற்றும் மாறன் என்ற இருவரை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பிய சிறுத்தை பெருமாநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அம்மாபாளையம் என்ற இடத்தில் பனியன் தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த காவலர் ராஜேந்திரன் என்பவரை தாக்கியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுத்தையை சுற்றி வளைத்தனர்.
அப்போது சிறுத்தை தாக்கியதில் உடுமலை வனச்சரகர் சிவக்குமார் உட்பட வனப் பணியாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். மேலும் அங்கிருந்து தப்பிய சிறுத்தை அருகில் உள்ள மற்றொரு புதருக்குள் பதுங்கியது. இதனை தொடர்ந்து மருத்துவர் சுகுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்தில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சிறுத்தை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கால்நடைத்துறை மருத்துவர் விஜயராகவன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார்.
விடுவிப்பு
இதனையடுத்து மயக்கமடைந்த சிறுத்தை கூண்டில் ஏற்றப்பட்டு வால்பாறை அருகே உள்ள காடம்பாறை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை நலமாக உள்ளதாகவும், அதற்குத் தேவையான உணவுகள் உள்ளதால் சிறுத்தை இந்த வனத்தை விட்டு வெளியே வராது என தெரிவித்தனர்.
நான்கு நாட்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே 7 பேரை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு சூழலியல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பாஜக இளைஞரணி தலைவர் மீது வழக்குப்பதிவு