திருப்பூரைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் திருப்பூரின் மைய பகுதியில் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை அவரது மறைவுக்கு பின்னர் அபகரிக்கும் வகையில் சிலர் போலி ஆவனங்கள் தயாரித்துள்ளனர். மேற்கண்ட சொத்து கர்நாடக நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு இணையாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாக சுப்ரமணியின் மகன் மதியழகன் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் இதில் தொடர்புடைய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் உறவினர் ராமசாமி, அவரது உதவியாளர் ஜனார்தனன் ஆகியோரை பிடிக்க திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு சிஐடி காவல்துறையினர் திருப்பூரில் வைத்து இருவரையும் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் உறவினர் கைது சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.