2008ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல், திருப்பூர் மாநகராட்சியாக செயல்படத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதேபோல் முத்தணம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி உட்பட 8 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகளாக தற்போது செயல்பட்டு வருகின்றன.
பின்னலாடைத் தொழில் நகரகமாக திருப்பூர் இருப்பதால், நாளுக்கு நாள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட தொழிலாளர்கள் வருகையால் தொடர்ந்து வளர்ந்து வரும் நகரங்களில் பட்டியலில் திருப்பூர் மாவட்டம் உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சியின் தெருவிளக்கு, குடிநீர் திட்டங்கள், மண்டல மற்றும் பிரிவு அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளிகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 300 மின் இணைப்புகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பின், தற்போது வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மின்வாரியத்தினர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் திருப்பூர் மாநகராட்சி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள அளவுக்கு, வேறெந்த மாநகராட்சியும் பாக்கி வைத்திருக்காது. திருப்பூர் மாநகராட்சிக்கு மின் கட்டணத்துக்கு வந்த தொகையை, பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதால், மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது.
தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் என பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மின் இணைப்புடன் இருப்பதால், பாக்கி வைத்துள்ள பெரும் தொகையை காரணங்காட்டி இணைப்பை துண்டிக்கவும் முடியவில்லை. மாநகராட்சி தரப்பில் குடிநீர் மற்றும் வீட்டுவரி வசூல் ஆகவில்லை என்கின்றனர். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு, மின் கட்டணம் செலுத்தவில்லை. ரூ. 23 கோடியே 67 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.
மாநகராட்சிக்கு சுமார் 300 இணைப்புகள் உள்ளன. மின்சாரக் கட்டணத்தை செலுத்த மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்கின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் கூறுகையில், ‘திருப்பூர் மாநகராட்சிக்கு பொதுமக்களிடம் இருந்து வர வேண்டிய வரி ஏராளமாக நிலுவையில் உள்ளது. கரோனா காலத்தால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணமாக கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதிநிலைமை சீரானதும், மின் கட்டணத்தொகை முழுமையாக செலுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.