இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இன்று (மார்ச் 22) இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட்டிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இதனையடுத்து ஹோட்டல் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கபட்டிருந்ததால், திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் இருந்த வட மாநிலத்தவர்கள், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று உணவு வழங்கினர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 300க்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கினர்.