திருப்பூர் மாநகராட்சியின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்திலும், விடுமுறை இல்லாமல் பணியாற்றி வந்த அவர்களுக்கு, இன்னும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத அவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம்கூட வழங்கப்படவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்கள்கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகக்கூறி இன்று, கருவம்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் அனைவரும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், மாவட்ட நிர்வாகம் 420 ரூபாய் ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் 300 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், ஆனால் அதையும் கூட கடந்த இரண்டு மாதங்களாக வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே பணியைத் தொடருவோம் எனத் தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டி கோரிக்கை!