கரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இந்நிலையில், திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் தற்போது முகக் கவசங்கள் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம், பின்னலாடை நிறுவனத்துடன் இணைந்து ஆன்டி வைரஸ் (anti-virus) கோட்டிங் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வகை முகக் கவசங்கள் 99.95 விழுக்காடு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அணியும்போது சுவாசிப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஆர்கானிக் காட்டன் வகையிலான துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை 10 முறைக்கு மேல் துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே பல்வேறு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐசிஎம்ஆர் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்!