திருப்பூர் செரிப் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், தங்கம் தம்பதியின் மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
இதுகுறித்து பேசிய மாணவர் இசக்கிராஜ், 'கடந்த சில நாள்களாக செய்திகளில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழப்பதை அறிந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என எண்ணி எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பாப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அறைத்து சாறு தயாரித்தேன்.
இந்தச்சாறுடன் சஞ்சீவ் வேர் மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். இதன்பின்னர் அந்த மூலிகையை மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என ஆட்சியரிடம் தெரிவிக்க வந்தேன்' என்றார். இதனையடுத்து மாணவர் இசக்கிராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.
இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஹோட்டலை போலியாக விற்க முயற்சி - மூவர் கைது