திருப்பூர் மாவட்டம், வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட திட்டமிட்ட மாநகராட்சி நிர்வாகம், அங்கு அமைந்திருந்த பழமையான மரத்தை அகற்ற முடிவு செய்தது.
இதனை அறிந்த இயற்கை ஆர்வலர் இளங்கோ, கிரீன் & கிளின் அமைப்பின் மூலம் மாநகராட்சியில் பழமையான அரசமரத்தை மறு நடவு செய்ய அனுமதி பெற்றார். இதனைத் தொடர்ந்து, வாலிபாளையம் பகுதியிலிருந்து 90 ஆண்டுகள் பழமையான, 80 அடிக்கும் மேல் உயரம் கொண்ட, 15 டன் எடையுள்ள மரத்தை அகற்றும் பணி ஆரம்பித்தது. இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் பெயர்க்கப்பட்ட இம்மரம், ராட்சத டிரக் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
முன்னதாக அரசமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டும், வேர்கள் காயமடையாதவாறும், சுற்றிலும் குழி தோண்டப்பட்டு மரத்தின் காயமடைந்த பகுதிகள் மட்டும் சாணம் கொண்டு மெழுகப்பட்டது.
ராட்சத டிரக்கில் எடுத்துச்செல்லப்பட்ட அரசமரத்திற்கு அப்பகுதி மக்கள், பூஜை செய்து மலர்த் தூவி வழி அனுப்பி வைத்தனர்.
டிரக் மூலம் காளம்பாளையம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அரசமரம், அங்கு நம்மாழ்வார் முறைப்படி கரும்பு சர்க்கரை, நாட்டுமாடுக்களின் கோமியம், சாணம் ஆகியவை கலந்த அமிர்த கரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னைநார் ஆகியவை கொண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக தோண்டப்பட்டிருந்த குழியில் கிரேன்களின் உதவியுடன் மரம் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது.