திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவருக்குத் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது புத்தாண்டு பண்டிகையானது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பரந்தாமன் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபடத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாராப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாமன் வந்து கொண்டிருந்த போது, அதே சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி சிக்னல் ஏதும் செய்யாமல், சாலையைக் கடக்கத் திரும்பியுள்ளது. அதில் எதிர்பாரா விதமாகப் பரந்தாமன் லாரியின் பின்பக்கம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, லாரியின் பின்பக்க டயரில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பரந்தாமனின் குழந்தைகளான கார்த்திகா ஸ்ரீ (9) மற்றும் பேரரசி (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பரந்தாமன் மற்றும் அவரது மனைவி காவேரி, அவரது மற்றொரு குழந்தை இளவரசி மூவரும் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த 2 பெண் குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்ற போது விபத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.