திருப்பத்தூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் அருகே அதிகாலை 4 மணியளவில் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பியோட முயற்சி
அப்போது இருவேறு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி வாகனத்தைச் சோதனையிட்டனர். அவர்களின் டேங்க் பையில் ஆந்திர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன எண் பலகை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரிக்கையில், அருண் பாண்டியன் (25) விஜயகுமார் (28) ஏழுமலை (31) ஆகியோர் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் கடத்துவதற்காகச் செல்வதை கண்டறிந்துள்ளனர்.
ஒருவர் தப்பியோடிய நிலையில், எஞ்சியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்றத்தூரில் 2 டன் அளவிலான செம்மரம் பறிமுதல்