திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பூங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர் அதே பகுதியைச்சேர்ந்த செவிலியரான இளம்பெண் ஒருவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனைப் பிரிந்து வசித்து வந்த அந்த இளம்பெண், செவிலியர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து ராஜேஷ் மனைவியின் சகோதரி பூங்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜேஷ் கையில் மறைத்து வைத்திருந்த திரவியத்தை மனைவியின் சகோதரியின் மீது ஊற்றி உள்ளார்.
உடனடியாக அப்போது, 'என் மீது ஏதோ ஊற்றி விட்டார்' என கூச்சலிட்டுக் கதறினார். உடனடியாக அங்கிருந்து கிராம மக்கள் ஒன்று கூடி அமிலமாக (ACID) இருக்கக்கூடும் என ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் அல்ல; எண்ணெய் போன்ற திரவியம் என்று தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து ராஜேஷை கைது செய்த ஆலங்காயம் காவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனைவியின் சகோதரியைக் காதல் வலையில் சிக்க வைக்க வசிய மருந்து ஊற்றியதாக ஒப்புக்கொண்டார்.
அதன் பெயரில் ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆபாசப் படங்களை காட்டி சிறுவனை கடத்திய பெண் மீது போக்சோ வழக்கு