திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேசன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அவரது மனைவி சங்கீதா பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும் பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஆக.4) இவர்களது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல் அவரது வீட்டின் அருகே நாட்டறம்பள்ளி முன்னாள் வட்டாட்சியர் பிரபு கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை சுந்தரம் உடல்நிலை சரியில்லாமல் கடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க பிரபு கணேஷ் சென்றுள்ளார்.
பிரபு கணேசன் மனைவி கிருஷ்ணவேணி (47) வாணியம்பாடியில் உள்ள அவருடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களது வீட்டிலும் அதேபோல் வீட்டினுள் புகுந்து 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே தெருவில் அடுத்தடுத்து இரண்டு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு அபகரிப்பு-விசிக பிரமுகர் உள்பட மூவர் கைது