திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்த கிருஷ்ணகிரி - திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், உதவி ஆய்வாளர் சாந்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டி ஊராட்சி கல்லாத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மயிலா (40) என்பதும் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு இருந்ததும் தெரியவந்தது.
இதனால் மனவேதனை அடைந்த மயிலா நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வந்து பணி செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது அருகில் இருந்த மாந்தோப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முள்ளம்பன்றியை வேட்டையாடிய நான்கு பேருக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்!