திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த 2 மணி நேரத்தில் காஞ்சிபுரம் அருகே கொலையாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (40). இவர் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தவர், சமூக ஆர்வலரும் ஆவார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு மாலை 6 மணிக்கு சென்று தொழுகை முடித்து விட்டு தனது 7 வயது குழந்தை உடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
தகவலின் பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குபதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (கூடுதல் பொறு) வேலூர் எஸ்பி செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன; பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதை கண்ட போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தி, 8 கிலோ கஞ்சா,10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
இதனை போலீசாருக்கு காட்டி கொடுத்ததால்தான், வசீம் அக்ரமை இந்த கும்பல் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 10 பட்டா கத்திகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேலூர் டி.ஐ.ஜி பாபு தலைமையில் 2 எஸ்.பிகள், 1 ஏ.டி.எஸ்.பி, 6 டி.எஸ்.பிக்கள், 15 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகன் கண் எதிரிலேயே தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்: கனவை நனவாக்கிய தங்க மகன்!