கடந்த சனிக்கிழமை வேலூர் அருகே தொரப்பாடி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மேசைகளை உடைத்த, மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ”வேலூர் அருகே தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளியில் தவறான செயலில் ஈடுபட்ட 12 மாணவர்கள் வரும் 4ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் மாதம்தோறும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். வேலூர் மாவட்டத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களில் மாணவர்களுக்கு தவறான முறையில் முடி திருத்தம் செய்தால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான முறையில் முடிதிருத்தும் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் இது தொடர்பான அறிக்கை அந்தந்த முடிதிருத்தும் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும். படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடபுத்தகங்கள், சீருடைகள், உணவு, அரசு இலவச பேருந்து பயணச்சீட்டு, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம். படிக்கின்ற மாணவர்கள், பள்ளிக்கும் பெற்றோருக்கும் நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.
பள்ளிகளில் தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க: Video: மேசைகளை அடித்து நொறுக்கும் பள்ளி மாணவர்கள்...!