தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (28) என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 4 பேருடன் விருந்திற்காக காரில் குடியாத்தம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேவுள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் பொழுது, திடீரென கார் ரேடியேட்டர் தண்ணீர் இல்லாமல் கொதித்து புகை வெளிவந்துள்ளது.
இதனைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதிலும் முன்னரே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கார் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராமல், முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஓட்டுனரின் சாதுரியத்தால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!