திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆம்பூர் நகர் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாகவும், வங்கிகள் இயங்காது எனவும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.
அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் தடை குறித்த அறிவிப்பு ஒன்றை பொதுமக்கள் கவனத்திற்கு வெளியிட்டார். பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ஆம்பூர் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூர் வர்த்தக மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை கட்டுப்பாடு எண்களுக்கு தெரிவித்தால் அவரவர் வீட்டிற்கு பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஆம்பூர் பகுதியில் உள்ள வங்கிகளில் அதிக அளவு மக்கள் கூடுகின்றனர். அந்த இடங்களும் நோய் பரப்பும் இடங்களாக இருப்பதால் ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள வங்கிகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருந்தகங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். மக்கள் இந்த அறிவிப்பை அலட்சியப்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து!