தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வருகின்றனர்.
மேலும் தீப்பெட்டி, பட்டாசு ஆலை, நூற்பாலைத்தொழிலாளர்கள், விவசாயிகள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் வந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை இருப்பதால், இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயமடைந்தவர்களும் அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலை உள்ளது.
ஃபிலிம் இல்லாத அரசு மருத்துவமனையின் அவலம்
இந்நிலையில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் எக்ஸ்-ரே பிரிவில், ஃபிலிம் இல்லாத காரணத்தினால், எக்ஸ்-ரேவை பேப்பரில் எடுக்கும் அவலநிலை உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக சிகிச்சைப் பெற வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
எக்ஸ்-ரே பரிசோதனையை ஃபிலிமில் எடுத்தால் பாதிப்புகள் குறித்து எளிதில் அறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், பேப்பரில் எடுத்துத்தருவதால் பாதிப்புகள் குறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது என நோயாளிகள் வேதனைப்படுகின்றனர்.
இதனால் மீண்டும் தனியார் எக்ஸ்-ரே மையத்திற்கே சென்று பணம் செலவழித்து ஃபிலிமில் எக்ஸ்-ரே எடுத்து, மீண்டும் மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தரமான சிகிச்சை கிடைப்பதில் சிரமம்
வழக்கமாக, அரசு மருத்துவமனையில் ஃபிலிம் மூலமாக எடுக்கப்படும் எக்ஸ்-ரேவுக்கு ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால், தற்பொழுது வெளியே எடுப்பதால் 800 ரூபாய் வரை, பொது மக்கள் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக விபத்துகளில் சிக்கி வருபவர்கள் பேப்பரில் எக்ஸ்-ரே முடிவினை கொடுப்பதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தரமான சிகிச்சை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீண்டும் எக்ஸ்-ரே ஃபிலிமில் முடிவுகளைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா