தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபர்வர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து அவரது கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரலும் அதுதான்.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து இந்தி எதிர்ப்பு என்பது இயக்கமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இருமொழிக் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை. இந்தி திணிப்பு என்பது எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசி உள்ளார். தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை அதிமுக அரசுதான் பெற்று தந்தது. தமிழ்நாட்டில் ரயில்வே துறை தேர்வுகள் தமிழில் தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவினை பெற்று தந்துள்ளோம். தமிழ் மொழிக்கு இந்த அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.