தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் உள்ள தொட்டிலேவான்பட்டி சோதனை சாவடியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான காவல்துறையினர், இன்று(ஜூலை 16) அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, அந்த வாகனத்தை சோதனையிட்டனர். சோதனையில், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத்குமார், சுரேந்திரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், மூவரும் ஈரோட்டிலிருந்து நெல்லைக்குச் செல்வதும், ராஜ்குமார் மீது மூன்று கொலை வழக்குகள், வினோத் குமார் மீது இரண்டு கொலை வழக்குகள், சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பத்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.