நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரோனா தடுப்பு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிலர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கரோனா தடுப்பு மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்று, லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனைக் கடை ஒன்றில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கி வைக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக சுகாதாரத்துறை, காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, துணைக் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் சண்முகம், அவரது சகோதரர் கணேசன் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை, மதுரையில் ரூ. 16 ஆயிரத்துக்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி, ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. யாரிடம் மருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : நீயா படம் போல் வஞ்சம் தீர்க்கிறதா பாம்புகள் - கர்நாடகாவில் வினோத சம்பவம்!