தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்திற்கு கடத்தப்படவிருந்த 3,900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இன்று (ஜூன் 4) பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சார்பில் தூத்துக்குடி புதியம்புத்தூர் விளக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி பிஅண்ட்டி காலனி பகுதியை சேர்ந்த காந்தி சங்கர் என்பவரை கைது செய்து 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவாலாப்பேரி பகுதியில் ஒரு தோட்டத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் வழங்கல் துறை குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு கடத்த இருந்த 3,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், வெள்ளாளன் கோட்டையைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களை கைது செய்ததுடன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் தொடர்பாக தலைமறைவாக உள்ள அஜித், முருகன், ஈஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது வாடிக்கையாகவே உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் அதிகளவில் பதுக்கி கடத்தப்படுகின்றன.
இதனால், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களின் விநியோகம் பெருமளவில் தட்டுபாடாகின்றன. பலர் ரேஷன் பொருட்கள் பெறாமல் அவதிக்குள்ளாகும் நிலை அதிகரித்துள்ளது. நியாய விலை கடைகளில் கடத்தல் சமபவங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கடத்தல் சம்பவங்களை தவிர்க்க அனைத்து நியாய விலை கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை அமைத்து அவற்றை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்தந்த மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரிகளும் நியாயவிலைக் கடைகளில் நடக்கும் அத்தியாவசியப் பொருள் கடத்தலை தடுக்க தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Anna University: பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் அதிகரிப்பு.. கடந்த ஆண்டை விட 11,218 பேர் கூடுதலாக விண்ணப்பம்!