மதுரை: பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட புதுக்கோட்டை மருத்துவர் ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட புதுக்கோட்டை மருத்துவர் ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் என்பவர் என் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தார். அதனை நான் சட்டரீதியாக எதிர்கொண்டு வந்தேன். இதனால் என்னையும், எனது வயதான தாயாரையும் அச்சுறுத்தி வந்தார்கள். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்நிலையில் நான் இல்லாத போது எனது வீட்டிற்கு வந்த கும்பல் என்னைக் கொலை செய்வதாக எனது தாயாரிடம் மிரட்டி சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ பதிவு உள்ளது. மேலும், எனது வீட்டிற்கு வந்த நபர்கள் கடிதம் ஒன்றையும், பென்டிரைவ் ஒன்றையும் எனது தாயாரிடம் போட்டுச் சென்றுள்ளனர். அதில், மிகவும் ஆபாசமான வார்த்தைகள் மற்றும் அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், அந்த பென்டிரைவை பார்த்த போது அதில் பெண்களைப் பற்றியும், மிக அருவருக்கத்தக்க வகையில் மருத்துவர் ராமதாஸ் பேசி உள்ளார். இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன். ஆனால் மாவட்ட காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசிய மருத்துவர் ராமதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: “பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்க” - மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்த மனு நீதிபதி தனபால் முன் நேற்று (பிப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் புகார் அளித்தார். அதன் பின் போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, முறையாக வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி தனபால், மனுதாரர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன் விசாரணைக்கு ஆஜராகி தனது புகார் குறித்து விளக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் மனுதாரர் புகார் மனு குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி தகுதியின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுத்து, விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.