தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த அய்யனாரின் மனைவி பேச்சியம்மாள். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கள் குடும்பத்திற்கு நேரம் சரியில்லை, உயர் பலி வாங்கும் நிலையில் உள்ளதாக கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தை அணுகியுள்ளார். இவ்ர் திருநெல்வேலியில் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
நகையை வைத்து பூஜை
அதற்கு தங்க நகையை வைத்து பூஜை செய்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய பேச்சியம்மாள் தனக்குச் சொந்தமான இரண்டரை பவுன் தங்க நகை, அவரது சகோதரர் காசிராஜனின் நான்கரை பவுன் தங்க நகையை மே 7ஆம் தேதி இரவு பேச்சியம்மாள் வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இரு குடும்பத்தினரையும் வெளியே நிற்க சொல்லிவிட்டு பேச்சியம்மாள் வீட்டிற்குள் உள்ள பூஜை அறையில் இரண்டு கூஜாவில் நகைகளை வைத்துள்ளதாகவும், 40 நாள்கள் கழித்து தான் கூஜாவை திறக்க வேண்டும் எனக் கூறிவிட்டு முத்துராமலிங்கம் சென்றுள்ளார். இதுபோல, பேச்சியம்மாள் வீட்டருகே உள்ள மாரியம்மாளும் ஜோதிடத்தை நம்பி கடந்த ஜுன் 1ஆம் தேதி அரை பவுன் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மூடத்தனத்தில் ஏமாந்தவர்கள்
இந்நிலையில் முத்துராமலிங்கம், அய்யனாரை தொடர்புகொண்டு மீண்டும் யாருக்காவது பரிகாரம் செய்ய வேண்டுமா? என கேட்டதையடுத்து, சந்தேகமடைந்த அய்யனார் அறையில் உள்ள கூஜாவை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகை ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் பூஜை செய்த மற்றவர்களுக்கு இது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். அவர்களும் முத்துராமலிங்கம் பூஜை செய்து கொடுத்த கூஜா, டிபன்பாக்ஸ் ஆகியவற்றை திறந்து பார்த்தபோது அதில் நகை இல்லை என்பது தெரியவந்தது.
கைது
இதையெடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.