தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில் வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி, ஃபைனான்சியர் கழுத்தை நெரித்து கொன்று, கார் டிக்கியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில், கார் ஓட்டுநர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று (செப். 8) நள்ளிரவு கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற போது காரின் டிக்கியில் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் மற்றும் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அங்கு கிடந்த செல்போன் மற்றும் காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.
முக்கால்வாசி எரிந்த நிலையில் சடலம் இருந்ததால் சம்பவ இடத்திலேயே தடயவியல் துறை உதவி இயக்குநர் கலா லட்சுமி தலைமையிலான நிபுணர்கள் பரிசோதனை நடத்தினர். பரிசோதனையில், கழுத்தில் கயிறு இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட முக்கிய தடயங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், செல்போன் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் (27) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து, குளத்தூர் போலீசார் மைக்கேல் ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். அவரது கார் ஓட்டுநராக மைக்கேல் ராஜ் பணிபுரிந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம், மைக்கேல் ராஜ் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாங்கிய பணத்தை மைக்கேல்ராஜ் கொடுக்க முடியாமல் போக பைனான்சியர் நாகஜோதி, ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல் ராஜ் என்ற மாரீஸை சிறை பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கிய மைக்கேல்ராஜ் வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்தி விடுவதாக தெரிவித்த நிலையில், நாகஜோதி, மைக்கேல்ராஜுடன் நேற்று முன்தினம் காலை காரில் புறப்பட்டுள்ளார்.
மேலும், கார் சாயல்குடியை கடந்து சென்றபோது, மைக்கேல் ராஜின் தம்பி கனி (வயது 26), ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் (வயது 28) மற்றும் இவர்களது கூட்டாளி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கணபதி (வயது 29) ஆகியோர் காரில் ஏறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சூரங்குடி அருகேயுள்ள குமரசக்கனாபுரம் பகுதியில் கார் வந்தபோது 4 பேரும் நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
நாகஜோதி பணம் தர மறுக்கவே, கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை காரின் பின்பகுதியில் வைத்து விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் வரை சடலத்துடன் சுற்றியதாக தெரிவிக்கப்படுகிறத. பின்னர் இரவு நேரத்தில் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் அப்போது மைக்கேல் ராஜின் செல்போன் கீழே விழுந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், செல்போனைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நாகஜோதி கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் நான்கு பேரையும் கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: Actor Marimuthu : நடிகர் மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி.. ஆதி குணசேகரனை காண திரண்ட மக்கள்!