தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டப திறப்பு விழாவுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வரவுள்ளார். தொடர்ந்து திருச்செந்தூரில் நடைபெறவுள்ள மணிமண்டப திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், இரண்டாயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்ட அறிவிப்புகளையும் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே அட்டை திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 318 பேர் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் அல்லாமல் பிற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கி பயனடைந்துள்ளனர். இதுவரை இந்தத் திட்டத்தில் எந்தவித குளறுபடிகள் ஏற்படவில்லை.
இருப்பினும் தொடர்ந்து மாலையில் ரேஷன் கடைகள் உள்ள சரக்கு இருப்பு கண்காணிக்கப்பட்டு குறைவாக உள்ள இடங்களுக்கு கூடுதலாக சரக்குகள் அனுப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை. சீனாவில் இருந்து தூத்துக்குடி திரும்பிய நான்கு சுற்றுலாப் பயணிகளும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு நபரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டு அதற்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் போட்டி நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா வரவிருப்பதையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் 'ஜான்வி'