குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய உணவுப் பாதுகாப்புக் கழகத்தின் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கூட்டமைப்பு நிர்வாகி இம்தாதுல்லாஹ், குடியுரிமை திருத்தச் சட்டம், மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.வி.சி. சண்முகம், சுந்தரிமைந்தன் ஆகியோர் போராட்டத்தில் கண்டன உரையாற்றினர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
ஆனால், பாஜகவுக்கு துணைபோகின்ற அதிமுக அரசு, சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்றாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும்வகையிலும், அடிப்படை அரசியலமைப்பைக் குலைக்கும்வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் முதலான கறுப்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும்" என்றார்.
இந்தப் போராட்டத்தையொட்டி ஜாமியா பள்ளிவாசலைச் சுற்றி அமைந்துள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்'