கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "எந்த எதிர்ப்பு வந்தாலும் உதயசூரியன் உச்சிக்கு வரும்போது எல்லா பகையையும் எரித்துவிடும். உதயசூரியன் உதயமாகும்போது தமிழ்நாடில் உள்ள இருட்டு நீங்கி வெளிச்சம் வரும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 8 மாடுகளை அடக்கிய வீரருக்கு தங்க காசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் போலி தங்கத்தை கொடுத்து இழிவான செயலை அவர் செய்துள்ளார். இதேபோல் தான் போலியான ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.
விளம்பரம் செய்ய கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால் மக்களுக்கு உதவி செய்ய பணம் இல்லை. அரசு பணத்தை எடுத்து பத்திரிகையில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
எல்லா விதத்திலும் தமிழ்நாடு வீழ்ச்சி பாதையில் செல்கிறது. தலைவர் ஸ்டாலினை அறிக்கை நாயகன் என்று கூறி வருகிறார்கள் அதிமுகவினர். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு நாயகனாக வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடுகிறார்.
பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. கன்னியாகுமரி, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவினரை காப்பாற்றதான் அரசு முனைப்பு காண்பித்து வருகிறது.
மழையால் பாதித்த விவசாயிகள் அழுகுரலை கேட்க கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.
நாங்கள் தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கவில்லை.
இரண்டு விழுக்காடு இருக்கும் மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கிறார்கள். பெரும்பான்மையான இந்துக்களுக்கு குரல் கொடுத்த ஒரே தலைவர் கருணாநிதி. அடுத்தப்படியாக மு.க. ஸ்டாலின் தான்" என்றார்.
இதையும் படிங்க: கருணாநிதி, ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் எம்பி!