தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலானது மிகவும் பிரசித்திபெற்றது. சிறந்த பரிகார ஸ்தலமாகவும் இந்த கோயில் விளங்கி வருகிறது. இங்கு திருவிழா காலங்களை தவிர்த்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது தேர்வு விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்ததால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்செந்தூர் பகுதிக்கு வந்து செல்கின்றது. மேலும் உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் நடைபெற்று வருவதால், கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் தற்போது அதிகமாக நகர் பகுதிக்குள் வந்து செல்கிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் உள்ள வடக்கு தெற்கு டோல்கேட் பகுதிகளில் உள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் கோவிலுக்கு வாகனத்தில் வரும் பக்தர்கள் கோவில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த முடியாமல் நகர் பகுதியில் உள்ள தேரடி, தாலுகா அலுவலகம் அருகில், பரமன்குறிச்சி ரவுண்டானா, திருநெல்வேலி சாலை, மார்க்கெட் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்ய நடந்து செல்கின்றனர்.
இப்படி நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒரு சில நாட்களில் மட்டுமே நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் தற்போது நகர் பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் நகர் பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வெளியே செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்தக் கடுமையான போக்குவரத்து நெரிசலால் நகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் பிரபல தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்; உரிமம் இல்லாததால் நடவடிக்கை