தூத்துக்குடி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜூலை 17) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் பொன்முடியின் வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மட்டும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தேர்தல் வரவுள்ளதால் திமுகவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். திமுக பற்றி தெரியாத, நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் பேசி வருகின்றனர். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா கூறிய, வாசிங் மிஷன் மாடல் விளம்பரம் போல பாஜகவில் சேர்ந்தால் என்ன குற்றம் இருந்தாலும் நிரபராதியாக பொன்மனச் செம்மலாக மாறி விடுகின்றனர். பழைய திட்டங்களுக்கு புதிய பெயரை தான் ஒன்றிய அரசு சூட்டியுள்ளது. வாட்ஸ் அப்பில் வருவதை நம்பக்கூடாது. எதையும் தீர விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கண்டு எதிர்கட்சியினர் வயிற்று எரிச்சலுடன் பேசி வருகின்றனர். ஒன்றிய அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கேஸ் மானியம் வழங்கவில்லை.
கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி நடவடிக்கை இல்லை. சுங்கச்சாவடி கட்டணம் குறைக்க வலியுறுத்தினால் உயர்த்தி வருகின்றனர். கல்வி கடன் பெற்றவர்களை விரட்டி, விரட்டி பணத்தை வசூலிக்கின்றனர். கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தியும் செய்யவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் விலைவாசி குறையும்.
பொது சிவில் சட்டம் கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது. அப்போது அம்பேத்கர் ஏற்றிய சட்டம் சரியில்லையா, இது மக்களை திசை திருப்பும் நிகழ்வு. 100 நாள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் துண்டாட முயற்சி செய்து வருகின்றனர். நோட்டாவைவிட எவ்வளவு ஓட்டு கூட வாங்குகிறார்கள், எவ்வளவு குறைவாக வாங்குகிறார்கள் என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம். அதிமுக இன்னும் செட் ஆகவில்லை, கட்சியினர் நம்முடன் தான் இருக்கிறார்களா இல்லை பாஜகவிற்கு போய் விட்டார்களா என்று தேடும் நிலை உள்ளது. திமுகவிற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: EPS: ஈபிஎஸ்க்கு எதிரான டெண்டர் வழக்கு - ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடி!