தூத்துக்குடி: அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மூத்தோர் தடகள கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் நேற்று (டிச. 3) ஆம் தேதி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 30 வயது நிறைவு பெற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் வீரர், வீராங்கனைகள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், காவல்துறையினர், இல்லத்தரசிகள் மற்றும் வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-34, 35-39, 40-44, 45-49, 50-54, 55-59, 60-64, 65-69, 70-74, 75-79, 80-84, 85-90, 90-94, 95-100 என்ற வயது பிரிவுகளின் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 5 கி.மீ நடைப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் முதல் மூன்று பரிசு பெறுபவர்கள் வரும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும் தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டியில் பங்கு பெறலாம், மாநிலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பிப்ரவரி மாதம் 14-19 ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் தேசியப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்தோர் தடகள ஆகிய மற்றும் தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற உடன்குடியை சார்ந்த 54 வயதான இடைநிலை உதவி ஆசிரியர் சரோஜா கிரேஸ் கூறுகையில், தான் உடன்குடியில் இடைநிலை உதவி ஆசிரியராக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 15 வருடங்களாக மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கு பெற்று வருவதாகவும், ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் விளையாடி தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றதாகவும் அதில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் சிந்தடிக் விளையாட்டு அரங்கம் அமைந்தால் இன்னும் பல வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அமையும், மூத்தோர்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ் அணி பேனர் கிழிப்பு.. அரூரில் நடந்தது என்ன?