தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட வில்லிசேரிப் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கப்பாண்டி( 34). இவருடைய மனைவி கற்பகம் (32). இவர்களுக்கு கீர்த்திகா (11) மனோசித்ரா (9) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 8.2.2015 அன்று குடும்ப செலவுக்காக கற்பகத்தின் தாய் வீட்டிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் பணம் வாங்கி வரவேண்டும் என கேட்டு தங்கபாண்டி தகராறு செய்துள்ளார். இதையடுத்து தாய் வீட்டுக்குச் சென்ற கற்பகம், சில நாட்களுக்குப்பின் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, "பணம் கொண்டு வராமல் ஏன் இங்கு வந்தாய்" என கேட்டு தங்கபாண்டி, கற்பகத்துடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி மனைவி என்றும் பாராமல் கற்பகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த, புகாரின் பேரில் கயத்தாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தங்கப்பாண்டி, அவரது சகோதரியின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
இதற்காக மனைவி கற்பகத்திடம் பணம் கேட்டு தகராறு செய்ததும் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த கொலைக்கு தங்கபாண்டியன் சகோதரர் தங்க மாரிமுத்து(40), சகோதரிகள் லதா செல்வி(34), சுப்புலட்சுமி(49), சுப்புலட்சுமியின் மகன் சரவணக்குமார்(26) ஆகியோரும் கூட்டுசதியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தங்கபாண்டியன், தங்கமாரிமுத்து, லதா செல்வி, சுப்புலட்சுமி ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவணக்குமார் தப்பியோடி விட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தங்கபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சுபாஷினி ஆஜராகி வாதாடினார்.
இதையும் படிங்க : பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா: அடித்துக் கொலை செய்த மருமகன்!