தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபுறங்களிலும் உள்ள உப்பளங்களில் கடந்த சில நாள்களாக ஃபிளமிங்கோ பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இது, அவ்வழியே நடைப்பயிற்சி செல்வோருக்கும், பயணிப்போருக்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சியாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஃபிளமிங்கோ பறவைகள் தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் முகாமிடாத நிலையில், இந்த ஆண்டு திடீரென முகாமிட்டிருப்பது அப்பகுதி வாழ் மக்களுக்கும், பறவைகள் ஆர்வலர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டம்விட்டு கண்டம் பறக்க
இது குறித்து தூத்துக்குடி பறவைகள் ஆர்வலர் க்யூபர்ட் தெரிவிக்கையில், "தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள உப்பளங்களில் முகாமிட்டுள்ள ஃபிளமிங்கோ பறவைகள் கண்டம்விட்டு கண்டம் பறக்கக் கூடியவை அல்ல. அவை அனைத்தும் இந்திய நாட்டிற்குள்ளேயே வடக்கு கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவை.
சீசன் (வலசைப் போதல்) காலத்திற்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறக்கக் கூடியவை. தற்பொழுது தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகளில் பறவைகள் சீசன் ஆரம்பித்துள்ளதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்விதமாக ஃபிளமிங்கோ பறவைகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளன.
மிகவும் கூச்ச சுபாவம் உடையவை
மிகவும் கூச்ச சுபாவம் உடைய இப்பறவைகள் மனிதர்களின் நடமாட்டத்தை வெகு தூரத்திலிருந்தே உணரக் கூடியவை. எனவே தற்காத்துக்கொள்ளும் விதமாக இவை உடனே பறந்துசெல்லக் கூடியவை.
இவ்வகை ஃபிளமிங்கோ பறவைகளுக்குப் பெரும்பாலும் ஆபத்தாக அமைபவை தெருநாய்கள் மட்டுமே. ஏனெனில் இரைக்காக ஃபிளமிங்கோ பறவைகள் உப்பளங்களில் முகாமிட்டிருக்கும்போது தெருநாய்கள் அவற்றை வேட்டையாடக் கூடிய ஆபத்தான சூழல் உள்ளது.
மேலும், ஒரு சில இடங்களில் ஃபிளமிங்கோ பறவைகள் வேட்டையாடப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து தற்போது வேட்டைத் தடுப்பு காவலர்களால் இந்த இனம் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அழிந்துவரும் இனங்கள் பட்டியலில் ஃபிளமிங்கோ பறவைகள் இல்லை என்றாலும் இவ்வகையான பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டியவைதான்.
இனப்பெருக்கத்திற்காகத் தயாராகிறது
இவை பொதுவாக 1 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. நன்கு வளர்ச்சி அடைந்த ஃபிளமிங்கோ பறவை 8 கிலோ எடை வரை இருக்கும். அலகின் நீளத்தை வைத்தும், உயரத்தை வைத்து இவற்றில் ஆண், பெண் இனம் கண்டறியப்படுகிறது.
இவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை குறைந்தது மூன்றிலிருந்து நான்கு முட்டைகள் இடும். இதன் குஞ்சு பொரிப்பு காலம் 30 முதல் 35 நாள்கள் ஆகும்.
அதன்பிறகு இவை அடுத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். பொதுவாக ஃபிளமிங்கோ பறவையின் இறகுகள் அடிப்பாகத்தில் ரத்தச் சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
அந்த இறகுகள் அவை இனப்பெருக்கத்திற்குத் தயாராக உள்ளதை அடையாளப்படுத்தும். மூன்று வயதில் உள்ள ஃபிளமிங்கோ பறவை இனப்பெருக்கத்திற்காகத் தயாராகிறது.
ஃபிளமிங்கோ பறவைகளின் உணவு
பொதுவாக இவை உப்பளங்களில் விளையும் ஒருவித பாசிகளையும், சிறு சிறு நத்தைகளையும், பூச்சிகளையும், நண்டுகளையும் உணவாக உட்கொள்ளும். மேலும், இவை நன்னீர் வாழ் இடங்களில் தட்டையான மரங்களில் அதிகம் காணப்படும்.
சீசன் காலங்களில் உணவு இரைக்காக மதுரை, அவனியாபுரம், ராமேஸ்வரம், கோடியக்கரை, பட்டணமருதூர், கூந்தன்குளம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இவற்றைப் பார்க்க முடியும். இவை கூட்டமாக வாழக்கூடியவை. இவற்றை மொத்தமாகப் பார்ப்பது மனத்திற்கு மிக மகிழ்ச்சியாகத் தரும்" என்றார்.
வலசைப் போதல் என்றால் என்ன?
வலசைப் போதல் (Bird / Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம்பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன.
மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன.
குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசைப் போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும்போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
வலசைப் போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில்தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.
இதையும் படிங்க: ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி